Monday, July 5, 2010

DOLLER CITY geetham

( பிறந்த மண் விட்டு பிழைப்புத்தேடி டாலர்சிட்டி நோக்கிப் புறப்படும் முன் கேட்க வேண்டிய உஷார் கீதம் )

பொம்மியக்கா திம்மியக்கா சேதி கேளுங்கடி - பீத்தைப்
பட்டிக்காடு வேணாமடி பட்டணம் வாங்கடி
திருப்பூரில் சூபபுத்திட்டம் நிறைய்ய இருக்குடி - எங்க
திமிங்கலங்கள் ஒண்ணாக்கூடிப் போட்ட திடடமடி

அஞ்சுவருசம் பத்துவருஷம் எழுதி வாங்குவோம் - சுமங்கலியா
அக்காதங்கை எல்லாரையும் வேலைக்குச் சேர்த்துவோம்
ஆயிரத்தை எழுதிக்கிட்டு ஐநூறு தருவோம் - எவளும்
ஆன்னாஊன்னா அப்புறம்வெறும் முன்னூறு தருவோம்

வேலைக்கார நாய்கள்தட்டி கேக்கப்ப் படாது - அப்புறம்
வில்லங்கமேதும் நாங்கசெஞ்சா புலம்பக் கூடாது
வரகுக்கஞ்சிக்கு இல்லாமத்தானே பட்டணம் வாறீக..? - இங்கே
விடுதிச் சோத்துக்கு வேலைசெஞ்சா கெட்டாபோவீக..?

ஈயத்தட்டை ஏந்திக்கிட்டு வரிசையில் வாங்கணும் - சோத்தில்
ஈயிபல்லி இருந்துச்சுன்னா அசைவம்னு திங்கணும்
களத்துமேட்டில் சேரும்சோறும் ஒன்னாத்தின்னவங்க - இங்கே
நளபாகம் கேக்குறது கொழுப்புத் தானேடி..?

எட்டுகெட்டு அளவிலொரு அரண்மனை தாறோம் - அதிலே
எட்டுமூதி படுத்துக்கலாம் பாயொண்ணு தாறோம்
ஆடுமாட்டை பட்டியடைச்சுப் பழகினநீங்களா - அறையில்
ஆளிடிச்சா நெரிசலுன்னு குடைச்சல் பண்றது..?

கள்ளிமறைப்பில் போனநீங்க கக்கூசில் போலாம் - அதுலே
தண்ணிவரும் நாப்பொழுதில் கழுவீட்டும் வரலாம்
ஆணுபெண்ணுக்குத் தனித்தனியா கக்கூஸ் இருக்குடி - கதவு
ஒடைஞ்சிருந்தா பொம்பளைது கதவில்லாட்டி ஆமபளைது

பெட்டைநீங்க மறைஞ்சுநின்னு குளிக்க வேணுன்னுதான் - தனியா
அட்டைபோட்டு நாலாப்பக்கம் கட்டி வெச்சிருக்கோம்
ஆத்துமேட்டில் அவுத்துப்போட்டு குளிச்ச கேட்டுக்கு - வேலைக்குச்
சேத்துக்கிட்ட பாவத்துக்கு சிலுப்பக் கூடாது

விடுதிக்குள்ளே மாசாமாசம் சினிமாக் காட்டுவோம் -அதுவும்
வேலைமுடிஞ்ச மூணாம்ஜாமத்தில் மட்டும் ஓட்டுவோம்
விடுமுறைநாள் ஒண்ணோரெண்டோ வெளியிலும் போலாம் - போயிட்டு அரைநாளில் திரும்பலேன்னா வேலையும் போலாம்

வேலைபோனாலும் வீட்டுக்குமட்டும் அனுப்பிறமாட்டோம் - செஞ்ச
வேலையிலேயே புதுக்கூலின்னு மறுபடி சேர்ப்போம்
ஒத்தெழுதின எக்ரிமென்ட்டு முடியறவரைக்கும் - நீங்க
செத்தாக்கூட ஆவியப்புடிச்சு வேலை வாங்கிருவோம்..

NIGHT SONG

சந்திரப் பூவைச் சுற்றி
நட்சத்திர வண்டெல்லாம்
மொய்க்குதுபார் அந்தி வானத்திலே !
-
வெயிலை விற்ற பணம்
வீட்டுக்கு கொடுக்க
சூரியன் போகுது தூரத்திலே !..
-
மஞ்ச மஞ்ச வானம் கொஞ்சங் கொஞ்சமாக
தஞ்சம் தஞ்சம் போகும் இருட்டுக்குள்ளே - அதை
வெள்ளை வெள்ளைப் பஞ்சுபோல் வெளுத்துத் தராமே
விடை பெறுவாளோ இரவுப்பெண்ணே..?
-
ஒ.. ராத்திரி ஓடுது கருப்பு நதி - அதில்
ஆசை அழுக்கைக் கரைப்போர் சிலபேர்..!
சேர்த்த செல்வம் இரைபபோர் பலபேர்..!
-
இருட்டு மட்டும் இல்லாதிருந்தால்
எந்த நிழலில் மனம் ஒதுங்கும் ?
கருப்பு மழை பெய்யாதிருந்தால்
வாழ்க்கைத் தோட்டம் வறண்டுவிடும்..!
-
பகலின் முதுகா ராத்திரி..?
ஒளியின் அழுக்கா ராத்திரி..?
வண்ணக் காற்றா ராத்திரி..?
வானத்தின் கதவா ராத்திரி..?